ஒப்பந்தங்களை மீறியது இந்தியா தான்; பேச்சு வார்த்தைக்குத் தயார்- சீனா அழைப்பு


ஒப்பந்தங்களை மீறியது இந்தியா தான்; பேச்சு வார்த்தைக்குத் தயார்- சீனா அழைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 4:20 AM GMT (Updated: 26 Jun 2020 4:20 AM GMT)

ஒப்பந்தங்களை மீறியது இந்தியா தான்; பேச்சு வார்த்தைக்குத் சீனா தயாராக உள்ளது சீனா தூதரக அதிகாரி சன் வெய்டாங் கூறி உள்ளார்.

பீஜிங்

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 45 பேரும் உயிர் இழந்தனர்.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன படையினர் அத்துமீறியதாக இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீனாவும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றன.

இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 

இதனிடையே கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக்கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன.

சர்வதேச விதிகளை மீறி இந்திய ராணுவத்தினர் தான் முதலில் சீன வீரர்களை தாக்கியதாக அந்நாடு கோரியுள்ளது. மேலும் ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் எல்லைத் தாண்டி வந்து சீனாவின் முகாமை அழித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. எல்லையில் பதற்றம் தணிய இந்தியா தான் ஒத்துழைக்க வேண்டும் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவுக்கான சீன தூதரக அதிகாரி சன் வெய்டாங் கூறியதாவது:-

பதற்றத்தைக் குறைக்கும் பொறுப்பு இந்தியாவுக்குத்தான் உள்ளது. எல்லையில் மோதலைத் தவிர்க்க இந்தியாவுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு சீனா தயாராகவே உள்ளது, ஆனால், சந்தேகமும், உரசல் போக்குகளும் தவறான பாதையில் செல்வதாகவே முடியும். இந்த பாதை இருநாட்டு மக்களின் அடிப்படை எண்ணங்களுக்கு எதிரானதாக அமையும். 

எல்லையில் சூழ்நிலையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இந்தியா சீனாவைப் பேச்சுவார்த்தைகள் மூலம் சந்தித்தால் எல்லையில் அமைதியை உருவாக்க சுமூகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இப்போதைக்கு இருதரப்பு எல்லைப்பகுதியும் நிலைத்தன்மையுடனும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலும் தான் உள்ளது.

சீனாவும் இந்தியாவும் பெரிய வளரும் நாடுகள். வளர்ச்சியடையும் பொருளாதாரங்கள், இருநாட்டு மக்கள் தொகையும் 100 கோடியைக் கடந்தது. இருநாடுகளுக்குமே தங்கள் வளர்ச்சியையும் மறு உயிர்ப்பாக்கத்துக்குமான வரலாற்றுக் கடமை இருப்பதை உணர வேண்டிய அவசியம் இருக்கிறது.

சீனா தரப்பில் எதுவும் இல்லை, இந்தியாதான் எல்.ஏ.சி என்ற கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்தது. எங்களைத் தூண்டியது சீனப்படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியப் படைகள் இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களை மீறியது இந்தியா தான் என கூறி உள்ளார்.

Next Story