சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது


சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 27 July 2020 11:38 PM GMT (Updated: 27 July 2020 11:38 PM GMT)

சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்பட்டது.

பீஜிங், 

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள் தனிநபர்களின் தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் ஆகியவற்றை அமெரிக்காவில் உள்ள தனது தூதரகத்தின் உதவியோடு சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது எனக்கூறி கண்டனம் தெரிவித்தது.

அதோடு நிற்காமல் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் தலைநகர் செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று காலை மூடப்பட்டது. தூதரகத்தில் இருந்த அமெரிக்க கொடி இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தூதரக கட்டிடத்தை சீனா தன் வசமாக்கிக்கொண்டது.

செங்டு நகரில் இந்த அமெரிக்க தூதரகம் கடந்த 1985-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் சுமார் 150 பேர் உள்ளூரில் இருந்து பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் நேற்று தூதரகத்தில் இருந்து வெளியேறியதும் தூதரக கட்டிடத்திற்கு பூட்டு போடப்பட்டது.

நேற்று முன்தினம் முதலே தூதரகம் அமைந்துள்ள பகுதி பரபரப்பாக இருந்தது. அமெரிக்க அதிகாரிகள் காரில் வருவதும், செல்வதுமாக இருந்தனர். மிகப்பெரிய கன்டெய்னர் லாரி வரவழைக்கப்பட்டு தூதரகத்தில் இருந்த பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

அதனை தொடர்ந்து தூதரகம் அமைந்துள்ள பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சீன போலீசார் தூதரகத்துக்கு செல்லும் பாதையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன போக்குவரத்தை நிறுத்தினர். அத்துடன் அந்த பகுதியில் மக்களின் நடமாட்டத்தையும் போலீசார் கட்டுப்படுத்தினர்.

எனினும் அமெரிக்கத் தூதரகம் மூடப்படுவது வரலாற்று நிகழ்வாக கருதிய சீன மக்கள் அதனை காண்பதற்காக நேற்று முன்தினம் மாலை முதலே அங்கு குவிய தொடங்கினர்.

கட்டுப்பட்டு தொலைவில் இருந்தே தூதரகம் மூடப்பட்ட நிகழ்வுகளை அவர்கள் பார்த்தனர். சிலர் அந்த காட்சிகளை தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். தூதரகம் மூடப்பட்ட நிகழ்வுகளை பார்ப்பதற்காக சிலர் வெளி மாகாணங்களில் இருந்து விமானம் மூலம் வந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் வருகையால் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள உணவகங்கள் ஐஸ்கிரீம் கடைகள் ஆகியவற்றில் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனிடையே சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதற்கு அமெரிக்க உள்துறை அமைச்சகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “செங்டு தூதரகம் 35 ஆண்டுகளாக திபெத் உட்பட மேற்கு சீனாவில் உள்ள மக்களுடனான எங்கள் உறவின் மையமாக இருந்து வந்தது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் இந்த முடிவால் நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். இந்த பிராந்தியத்தில் உள்ள எங்களது மற்ற பதவிகள் மூலம் சீன மக்களுடன் தொடர்ந்து பயணிக்க முயற்சிப்போம்” என கூறப்பட்டுள்ளது.


Next Story