சீனாவுடனான மோதல் போக்கு: டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் மாறுமா...?


சீனாவுடனான மோதல் போக்கு: டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் மாறுமா...?
x
தினத்தந்தி 28 July 2020 8:21 AM GMT (Updated: 28 July 2020 8:21 AM GMT)

சீனாவுடனான மோதல் போக்கு டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் கண்டிப்பாக மாறும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

வாஷிங்டன்

சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், இது எதிர்வரும் மாதங்களில் ஒரு ராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டை உளவு பார்ப்பதாக கூறி டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை அமெரிக்க மூட உத்தரவு பிறப்பித்ததை அடுத்து,

சீனாவின் செஙடு நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டதுடன், தூதரக அதிகாரிகள் அனைவரும் திங்கட்கிழமை நாட்டைவிட்டு வெளியேறவும் கோரியுள்ளனர்.இந்தமுறை தம்மை தோற்கடிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் பங்களிப்பு இருக்கலாம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற சந்தேகங்கள், இரு நாட்டின் உறவை மேலும் சிக்கலாக்கும் என்றே அரசியல் நோக்கர்களின் கருத்து. கட்டுப்படுத்த முடியாத கொரோனா பரவல், தென் சீனா கடல், ஹாங்காங் அரசியல்,  விசா மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகளே தற்போது சிக்கலான சூழலில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துடனையே செயல்பட்டு வந்துள்ளனர்.ஆனால் அந்த காலகட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காடியுள்ளனர்.

அதிக கடும்போக்கான சீனா கொள்கை தேவை என்ற மன நிலை தற்போது அமெரிக்காவில் அதிகரித்துள்ளதாக கூறும் நிபுணர்கள்,சீனாவை மக்களாட்சி முறைக்கு கொண்டு வரலாம் என நம்பியிருந்த சீனா ஆதரவு தலைவர்களும் தற்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டதாகவும்,ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லாத டிரம்ப் அரசாங்கத்தின் கடுபோக்கு நடவடிக்கைகளை குறித்த தலைவர்கள் எதிர்ப்பதாகவும் நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி டிரம்ப் அரசாங்கத்தின் இந்த கடும்போக்கு அரசியல் போர் சூழலை உருவாக்கலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க போதுமான வழிகள் இன்னமும் இருப்பதாகவே அமெரிக்க சார்பில் சீனாவில் பணியாற்றிய நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

சீனாவை தற்போது கடுமையாக விமர்சிக்கும் டிரம்பின் நிலை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றால் கண்டிப்பாக மாறும் எனவும்,அல்லது தேவையெனில் தேர்தலின் வெற்றிக்கு சீனாவின் உதவியை டிரம்ப் ரகசியமாக கோரலாம் எனவும் சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்க தொழிலதிபர்களும் உயரதிகாரிகளும் முன்னெடுத்த சீனா ஆதரவு நிலையே, அந்த நாட்டை உலகின் இரண்டாவது பொருளாதாரசக்தியாக வளர உதவியது என அமெரிக்காவின் வெளிவிவகார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஷ்யாவை எதிர்க்க தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1972 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மேற்கொண்ட சீனா சுற்றுப்பயணமே இரு நாட்டு உறவுக்கு அடிப்படை காரணம் என கூறப்படுகிறது.

தொடர்ந்து அடுத்த 7 ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்கள் பல சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒருபகுதியாக சீனாவுக்குள் நுழைந்தன.இதனால் சீனாவின் கடும்போக்கு அடிப்படைக் கொள்கைகளில் மாறுதல் ஏற்படவில்லை மாறாக பொருளாதார பலமடைந்த சீனா அதன் உண்மையான முகத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.


Next Story