இங்கிலாந்தில் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நாதிம் ஜஹாவி நியமனம்


இங்கிலாந்தில் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நாதிம் ஜஹாவி நியமனம்
x
தினத்தந்தி 29 Nov 2020 11:35 PM GMT (Updated: 29 Nov 2020 11:35 PM GMT)

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்பார்வையிட, புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நாதிம் ஜஹாவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லண்டன், 

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே அஸ்ட்ராஜெனெகா என்கிற மருந்து நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த தடுப்பூசி சராசரியாக 70 சதவீத தடுப்பாற்றலை கொண்டுள்ளது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி கிறிஸ்துமஸ்க்கு முன்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினரான நாதிம் ஜஹாவியை புதிய சுகாதாரத்துறை மந்திரியாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். இடைக்கால ஏற்பாட்டின் கீழ் நாதிம் ஜஹாவி தற்போது பணிபுரியும் சுகாதாரத்துறை மற்றும் வணிகத்துறை இடையே கூட்டு மந்திரியாக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது முதன்மை கவனம் தடுப்பூசியை வழங்குவதில் இருக்கும் என்றும் அவருடைய வணிக இலாகாவின் பெரும்பாலான பகுதிகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் அடுத்த ஆண்டு கோடை காலம் வரை கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மேற் பார்வையிடுவார் என தெரிகிறது.

Next Story