மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்த ரெயில்; 23 பேர் பலி


மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்த ரெயில்; 23 பேர் பலி
x
தினத்தந்தி 4 May 2021 5:48 PM GMT (Updated: 4 May 2021 5:48 PM GMT)

மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் ரெயில் விழுந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெட்ரோ ரெயில் போக்குவரத்து

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் விரைவான போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை ஏற்றிச்செல்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மெக்சிகோ சிட்டியின் தெற்குப் பகுதியில் உள்ள ஒலிவோஸ் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

மெட்ரோ ரெயில் பாலம் உடைந்தது

ரெயில் நிலையத்துக்கு அருகே உள்ள மெட்ரோ ரெயில் பாலத்தில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.‌ அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து விழுந்தது. இதையடுத்து அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரெயிலின் சில பெட்டிகள் சாலையில் விழுந்தன. அவற்றில் ஒரு பெட்டி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது விழுந்தது.‌ சாலையில் விழுந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறித் துடித்தனர். இதையடுத்து அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

23 பேர் பலி; 70 பேர் படுகாயம்

மேலும் இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த ரெயில் பெட்டிகளை ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தி விட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.‌

இடிபாடுகளில் இருந்து 23 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் 70-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் போது பாலத்தில் விரிசல்

இதனிடையே விபத்தில் சிக்கிய மெட்ரோ ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் மேலும் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என தெரிகிறது.‌ எனினும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே உடைந்து விழுந்த மெட்ரோ ரெயில் பாலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நிலநடுக்கத்தின் போது பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும், அதுவே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் புகார் கூறுகின்றனர்.

ஆனால் மெட்ரோ ரெயில் பாலத்தில் ஏற்பட்ட விரிசல்கள் உடனடியாக சரி செய்யப்பட்டதாக மெக்சிகோ சிட்டி மெட்ரோ நிர்வாகம் கூறுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மெக்சிகோ சிட்டியில் 2 மெட்ரோ ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததும் நினைவு கூரத்தக்கது.

 


Next Story