பழிக்கு பழி... ஈரானில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் படுகொலை


பழிக்கு பழி... ஈரானில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் படுகொலை
x
தினத்தந்தி 27 Jan 2024 10:29 PM GMT (Updated: 27 Jan 2024 10:41 PM GMT)

இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்கும்படி ஈரானிடம் கேட்டிருக்கிறோம் என்று பாகிஸ்தான் தூதர் தெரிவித்து உள்ளார்.

தெஹ்ரான்,

ஈரானின் சிஸ்டான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் சரவான் நகரில் ஈரானியர்கள் அல்லாத 9 பேரை அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இதனை ஈரான் நாட்டின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எனினும், எந்தவொரு குழுவும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என பாகிஸ்தான் தூதர் அடையாளம் காட்டியிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவை தூதரகம் வழங்கும். இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்கும்படி ஈரானிடம் கேட்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

9 பாகிஸ்தானியர்களின் கொடூர கொலை ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கிறது என்று ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது முதசீர் திப்பு எக்ஸ் பதிவை வெளியிட்டு உள்ளார்.

சமீபத்தில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பை இலக்காக கொண்டு ஈரான் அரசு, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் பலூசிஸ்தானில் நடந்த இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதலில் ஈடுபட்டது. சப்பார் பகுதியை நோக்கி இந்த தாக்குதல் நடந்தது. ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

ஈரானை ஒரு சகோதர நாடு என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அந்நாடுகளுக்கு இடையே நடந்த இந்த தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியம் ஏற்படுத்தியது. இந்த சூழலில், ஈரானில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


Next Story