20 ஆண்டுகளாக கர்ப்பப்பை, பெண் சுரப்பிகள், மாதவிடாயுடன் தவித்த சீனர்


20 ஆண்டுகளாக கர்ப்பப்பை, பெண் சுரப்பிகள், மாதவிடாயுடன் தவித்த சீனர்
x

கோப்பு படம்

தினத்தந்தி 11 July 2022 3:29 AM GMT (Updated: 11 July 2022 5:33 AM GMT)

20 ஆண்டுகளாக கர்ப்பப்பை உடன் மாதவிடாயும் ஏற்பட்ட சீனர் சிகிச்சைக்கு பின் நலமடைந்து உள்ளார்.


பீஜிங்,

சீனாவை சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கு வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு வந்துள்ளது. அவரது சிறுநீரில் ரத்தமும் வந்துள்ளது. சென் லீ என்ற புனை பெயரால் அறியப்படும் அந்த நபருக்கு வயது வந்தபோது, சீரற்ற சிறுநீர் வெளியேற்றம் இருந்துள்ளது. இதற்காக அதனை சரி செய்யும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். அதன்பின்னர், 20 ஆண்டுகளாகவே அவருக்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இதனால், அப்பெண்டிஸ் எனப்படும் குடல்வால் அறுவை சிகிச்சையையும் அவர் செய்து கொண்டார். இந்நிலையில், சென்னுக்கு பெண்களுக்கான பாலியல் குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, இனப்பெருக்க விவகாரங்களுக்கான மருத்துவமனையை தேடி அவர் அலைந்துள்ளார். சிச்சுவான் மாகாணத்தில் இருந்து 930 மைல்கள் தொலைவுக்கு பயணித்து குவாங்சவ் வந்தடைந்த சென், அதற்கான மருத்துவமனையை கண்டறிந்து உள்ளார்.

இதன்பின் அவர் மருத்துவ பரிசோதனை செய்ததில், கர்ப்பப்பை மற்றும் பெண்களுக்கான சுரப்பிகள் உள்ளிட்ட பெண்களுக்கான இனப்பெருக்க உள் உறுப்புகள் அவருக்கு இருப்பது தெரிய வந்தது. சென்னுக்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருந்து வந்துள்ளன. 20 ஆண்டுகளாக அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு உள்ளது. இதனாலேயே அவருக்கு சிறுநீரில் ரத்தம் வெளியேறி வந்துள்ளது.

இதனை அடுத்து சென்னுக்கு அறுவை சிகிச்சை முடிந்து 10 நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். இதன்பின்னர், சென் மற்ற ஆண்களை போல் வாழலாம் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லுவோ ஜிபிங் கூறியுள்ளார். எனினும், விந்தணு உற்பத்தி செய்ய முடியாத சூழலில் அவரால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்றும் லுவோ கூறியுள்ளார்.

உலக மக்கள் தொகையில் 0.05 முதல் 1.7 சதவீதத்தினர் இதுபோன்று ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளுடன் உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.


Next Story