சீன அரசின் தவறான நடவடிக்கை; தள்ளாடும் சுகாதார துறை, தவிக்கும் மக்கள்: அறிக்கை தகவல்


சீன அரசின் தவறான நடவடிக்கை; தள்ளாடும் சுகாதார துறை, தவிக்கும் மக்கள்:  அறிக்கை தகவல்
x

சீனாவின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கையால் சுகாதார துறை மற்றும் மக்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.


பீஜிங்,


சீனாவில் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மக்களை துயரில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், மக்களிடம் இதற்கு வரவேற்பு இல்லை. தொடர் போராட்டங்களால் அரசு ஊரடங்கை தளர்த்தி அறிவித்தது.

இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் தொடக்கத்தில் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.

இந்நிலையில், ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சி அரசின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கையால் அந்நாட்டு சுகாதார துறை விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என இன்சைடு ஓவர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

சீனாவில், 2020-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு இறுதி வரையில், உற்பத்தி மற்றும் சேவை துறையானது வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது என பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஜ்ய கொரோனா கொள்கை என்ற பெயரிலான நடவடிக்கையால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த அந்நடவடிக்கை தவறியது என இன்சைடு ஓவர் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஊரடங்கு தளர்வால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் சூழலில், டாக்டர்கள் மருத்துவமனையில் குவிந்து வரும் நோயாளிகளை எதிர்கொள்ள முடியாமல் மறுபுறம் திணறி வருகின்றனர்.

சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன என அரசு அறிவித்து உள்ளது. ஆனால், தொற்று பாதித்தோ அல்லது தொற்று பரவல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.

சீனாவில் முக கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு கூட நடைமுறையில் இல்லை. 20 சதவீத சீன இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். சீனாவில் உள்ள 80 சதவீத ஐரோப்பிய நிறுவனங்கள் வருங்கால வருவாய் கணிப்புகளை குறைத்து அறிவித்து உள்ளன.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, 2022, டிசம்பர் 23-ந்தேதியில் இருந்து 2023, ஜனவரி 3 வரையிலான தேதியில் 31 ஆயிரத்து 585 பேர் உயிரிழந்தும், 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் பல அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அரசின் பெருமுயற்சியால் பரவல் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசுக்கு கைகொடுத்தன.

ஆனால், உலக நாடுகளில் பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் பல அலைகளை சந்தித்த பல நாடுகளும், ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் நெருக்கடியான கொரோனா பரவல் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் பரவல் அதிகரித்து, தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Next Story