பணய கைதிகளை விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்


பணய கைதிகளை விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
x
தினத்தந்தி 8 April 2024 3:10 AM GMT (Updated: 8 April 2024 8:06 AM GMT)

பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியது முதல் காசா முனையில் தற்போது நடந்துவரும் போரில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் 604 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் விரைவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எகிப்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேல் மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது;-

நாம் வெற்றிபெற இன்னும் ஒருபடியே எஞ்சியுள்ளது. ஆனால், வெற்றிக்காக நாம் கொடுத்த விலை வலி நிறைந்தது. பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது. பணய கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தயாராக உள்ளது. ஆனால், சரணடைய இஸ்ரேல் தயாராக இல்லை. ஹமாஸ் வலிமைபெறும் வகையில் சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக சர்வதேச நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அது பணய கைதிகள் விடுதலைக்கான முயற்சிகளை அதிகரிக்கும்.

எங்களை யார் தாக்கினாலும், தாக்க நினைத்தாலும் நாங்கள் அவர்களை தாக்குவோம். இந்த கொள்கையை நாங்கள் அனைத்து நேரமும் பின்பற்றுகிறோம். இப்போதும் பின்பற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story