உக்ரைன் ராணுவத்தில் இணைந்த வீரர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சி


உக்ரைன் ராணுவத்தில் இணைந்த வீரர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சி
x

உக்ரைன் ராணுவத்தில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை அங்கு இடைவிடாமல் போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் குதித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர்களாக உள்ள நிலையில், அவ்வாறு புதிதாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் 10 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு இங்கிலாந்து ராணுவத்தின் உதவியுடன் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக உக்ரைனில் இருந்து வீரர்களின் குழு ஒன்று இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. அங்கு அவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வது, அவசரகால போர் நுணுக்கங்கள், போர்க்களத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

உக்ரைனுக்கு சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக ஏற்கனவே இங்கிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த ராணுவ பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story