ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மத்திய பிரதேசம் ஆட்டம் ‘டிரா’


ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மத்திய பிரதேசம் ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 4 Nov 2018 7:36 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. கடைசி நாளில் தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் சதம் அடித்தார்.

திண்டுக்கல்,

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 37 அணி கள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. தமிழ்நாடு - மத்திய பிரதேச அணிகள் (‘பி’ பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் கடந்த 1-ந்தேதி நத்தத்தில் (திண்டுக்கல்) தொடங்கியது. முதலில் பேட் செய்த மத்திய பிரதேச அணி 393 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மழையால் 3-வது நாளில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 77.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்திருந்த போது, இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. கேப்டன் பாபா இந்திரஜித் சதம் (103 ரன், 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தார். முரளிவிஜய் 19 ரன்னிலும், விஜய் சங்கர் 17 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. தமிழக அணி தனது 2-வது லீக்கில் ஐதராபாத் அணியை, நெல்லையில் வருகிற 12-ந்தேதி சந்திக்கிறது.

புனேயில் நடந்த நடப்பு சாம்பியன் விதர்பா - மராட்டியம் அணிகள் இடையிலான ஆட்டம் (‘ஏ’ பிரிவு) டிராவில் முடிந்தது. இதில் முதல் இன்னிங்சில் 120 ரன்களில் முடங்கி ‘பாலோ-ஆன்’ ஆன விதர்பா அணி 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடியது. 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்திருந்த விதர்பா அணி, கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடி 8 விக்கெட்டுக்கு 501 ரன்கள் குவித்து தோல்வியில் இருந்து தப்பியது. கேப்டன் பைஸ் பாஸல் (131 ரன்), விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர் (122 ரன்) சதம் கண்டனர். இருப்பினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மராட்டியம் 3 புள்ளிகளும், விதர்பா ஒரு புள்ளியும் பெற்றன.


Next Story