எந்த நிலைகளில் களம் இறங்கினாலும் சிறப்புடன் பேட்டிங் செய்கிறார்; தமிழக கிரிக்கெட் வீரருக்கு புகழாரம்


எந்த நிலைகளில் களம் இறங்கினாலும் சிறப்புடன் பேட்டிங் செய்கிறார்; தமிழக கிரிக்கெட் வீரருக்கு புகழாரம்
x
தினத்தந்தி 12 March 2019 12:51 PM GMT (Updated: 12 March 2019 12:51 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரர் விஜய் சங்கர் எந்த நிலைகளில் களம் இறங்கினாலும் சிறப்புடன் பேட்டிங் செய்கிறார் என பந்து வீச்சிற்கான பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.  தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் (வயது 28).  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7வது வீரராக இறங்கி 3வது ஒரு நாள் போட்டியில் 32 ரன்கள் (30 பந்துகள், 4 பவுண்டரிகள்) மற்றும் 4வது ஒரு நாள் போட்டியில் 26 ரன்கள் (15 பந்துகள் 1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்துள்ளார்.

உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறந்த பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு ஆல் ரவுண்டராக வலம் வருகிறார்.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சிற்கான பயிற்சியாளர் பரத் அருண் கூறும்பொழுது, விஜய் நம்பிக்கை பலம் பெற்றுள்ளார்.  அவருக்கு வழங்கப்படும் 4, 6 மற்றும் 7வது வீரர் என வேறுபட்ட நிலைகளில் களமிறங்கி திறமையுடன் பேட்டிங் செய்து வருகிறார்.

அவர் பேட்டிங்கில் பெற்றுள்ள நம்பிக்கையானது பந்து வீச்சிலும் வெளிப்படுகிறது.  மணிக்கு 120 முதல் 125 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி வந்த இவர், 130ஐ தொட்டுள்ளார்.  அவர் இந்திய அணியின் உறுதிமிக்க வீரராக இருந்து வருகிறார் என கூறியுள்ளார்.

Next Story