ஐ.பி.எல். கொரோனா சோதனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு


ஐ.பி.எல். கொரோனா சோதனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 2 Sep 2020 12:51 AM GMT (Updated: 2 Sep 2020 12:51 AM GMT)

ஐ.பி.எல். கொரோனா சோதனைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய்,

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐக்கிய அமீரக கிரிக்கெட் வாரியத்துடன், இந்திய கிரிக்கெட் வாரியம் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.

வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர்கள், அணி நிர்வாகிகள், ஓட்டல் ஊழியர், மைதான ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த 20-ந்தேதியில் தொடங்கி போட்டி முடிவடையும் காலம் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகளை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு பரிசோதனைக்கும் வரிப்பிடித்தம் இல்லாமல் உள்ளூர் மதிப்புப்படி (அமீரகம்) ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் செலவு ஆவதாகவும் ஐ.பி.எல். மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘கொரோனா சோதனைக்காக மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் மொத்தம் ரூ.10 கோடி செலவிடுகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 75 மருத்துவ பணியாளர்கள் இந்த பரிசோதனை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வீரர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம்’ என்றும் குறிப்பிட்டார்.

Next Story