தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சை எங்களால் சமாளிக்க முடியும் : புஜாரா பேட்டி
![தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சை எங்களால் சமாளிக்க முடியும் : புஜாரா பேட்டி தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சை எங்களால் சமாளிக்க முடியும் : புஜாரா பேட்டி](https://img.dailythanthi.com/Articles/2021/Dec/202112240330123878_-----_SECVPF.gif)
வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எப்போதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என புஜாரா கூறியுள்ளார்
செஞ்சூரியன்,
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாடும் வெளிநாட்டு அணிகளுக்கு அங்குள்ள ஆடுகளங்களில் வேகமும், பவுன்சும் இருக்கும், வேகப்பந்து வீச்சில் பந்து நன்கு திரும்பும் என்பது தெரியும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எப்போதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எங்களால் திறம்பட சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். போட்டிக்கு நன்றாக தயாராகி வருவதால், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு தென்ஆப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் உள்ளது.
அந்த அனுபவம் உதவிகரமாக இருக்கும். பெரும்பாலான அணிகள் தங்கள் நாட்டில் உள்ளூர் சூழலில் சிறப்பாக விளையாடும். தென்ஆப்பிரிக்காவும் அதில் விதிவிலக்கல்ல. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு வரிசையை கொண்டுள்ள அணிகளில் தென்ஆப்பிரிக்காவும் ஒன்று.
நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடினோம். அது வெளிநாட்டு மண்ணில் எங்களால் வெற்றி வாகை சூட முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்துள்ளது. அத்துடன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை பார்க்கும் போது, தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் திறமை எங்களிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு புஜாரா கூறினார்.
Related Tags :
Next Story