தற்போதைய நிலைமையில் அவரின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை கொடுப்பதாகவே இருக்கிறது - இந்திய வீரர் மீது ஆர்.பி.சிங் அதிருப்தி


தற்போதைய நிலைமையில் அவரின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை கொடுப்பதாகவே இருக்கிறது - இந்திய வீரர் மீது ஆர்.பி.சிங் அதிருப்தி
x

Image Courtesy: ANI

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் கே.எஸ். பரத் கீப்பிங் செய்வதில் நன்றாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.

காயமடைந்த ரிஷப் பண்ட்க்கு பதிலாக கடந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 221 ரன்களை 20.09 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். குறிப்பாக 30 வயதை நிரம்பியுள்ள அவர் இதுவரை பெரும்பாலும் சொந்த மண்ணில் விளையாடியும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போதைய நிலைமையில் கே.எஸ்.பரத்தின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை கொடுப்பதாகவே இருக்கிறது என இந்திய முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணியை நீங்கள் பார்க்கும் போது அதில் 3 – 4 வீரர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலை இல்லை. அந்த வரிசையில் கே.எஸ். பரத் இருக்கிறார். ஏனெனில் ரிஷப் பண்ட் முதலில் உடற்தகுதி சோதனைக்கு சென்று உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

ரிஷப் பண்ட்க்கு நிகரான திறமையை கொண்ட ஒரு வீரரை அணி நிர்வாகம் அல்லது தேர்வுக் குழுவினர் பார்த்திருந்தால் இந்நேரம் கே.எஸ்.பரத் பெஞ்சில் அமர்வதற்கு நீண்ட நேரமாகாது. கே.ஸ்.பரத் பெறும் ஒவ்வொரு வாய்ப்பும் முக்கியமானதாகும். அவர் கீப்பிங் செய்வதிலும் இதுவரை சில கேட்ச்களை தவற விட்டு தடுமாற்றமாகவே செயல்பட்டுள்ளார். அதற்காக அவர் நன்றாக செயல்படவில்லை என்று சொல்லவில்லை.

ஆனால் ரிஷப் பண்ட் போன்றவர் வெளிப்படுத்திய செயல்பாடுக்கு நிகராக விளையாடுவதற்கு அவர் பயிற்சியாளர்களின் உதவியை நாட வேண்டும். மற்றவர் வரும் போது நாம் அணியை விட்டு சென்று விடுவோம் என்று அவர் நினைக்கக் கூடாது.

உங்களுடைய வேலை அணியின் வெற்றியில் பெரியதாக இருக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் கே.எஸ். பரத்தின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை கொடுப்பதாகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story