விராட் கோலி மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்காது - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்


விராட் கோலி மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்காது - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
x

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் கேப்டன்சியை இந்தியா தவறவிட்டுள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆனால் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்களை சேசிங் செய்த இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில், ஒல்லி போப் தனி ஒருவராக அணியை வலிமையான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார். ஆனால் இந்திய அணி வீரர்களால் ஒல்லி போப்பை தடுக்க முடியாமல் தடுமாறினர். அதிலும் அவர் கொடுத்த கேட்சுகளை தவறவிட்டனர். இதற்கு கேப்டனாக ரோகித் சர்மா சரிவர செயல்படாததே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், "இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் கேப்டன்சியை பெரிதும் இழந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது. ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தற்போது செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன். களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை" என்று மைக்கேல் வாகன் கூறினார்.


Next Story