ஆடுகளம் நன்றாகதான் இருந்தது ஆனால்...- தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து


ஆடுகளம் நன்றாகதான் இருந்தது ஆனால்...- தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
x

Image Courtesy: Twitter

தினத்தந்தி 8 April 2024 4:03 AM GMT (Updated: 8 April 2024 5:22 AM GMT)

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

லக்னோ,

ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 164 ரன் எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய குஜராத் அணி சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறியது. குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆடுகளம் நன்றாக தான் இருந்தது. ஆனால் எங்களுடைய செயல்பாடு தான் மிகவும் மோசமாக அமைந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். ஆனால் நடு ஓவர்களில் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம். அதிலிருந்து எங்களால் மீளவே முடியவில்லை.

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கின்றேன். இந்த ஆடுகளத்தில் லக்னோ அணி 170 முதல் 180 ரன்கள் எடுக்கும் என நினைத்தேன். ஆனால் அதனை விட குறைவாக தான் லக்னோ அணி எடுத்தது. இதற்கு எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டேவிட் மில்லர் ஆட்டத்தை தனியாக மாற்றக்கூடிய வீரர். தற்போது எங்களுடைய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அது கொஞ்சம் சரிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த இலக்கை நாங்கள் நிச்சயம் எட்டுவோம் என நினைத்தேன்.

பவர்பிளேவின் கடைசி ஓவர் என்பதால் அதனை சரியாக பயன்படுத்தி ரன்கள் சேர்க்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். அதற்காக அதிரடியாக ஆட முற்பட்ட போது என்னுடைய விக்கெட்டை இழந்தேன். உமேஷ் யாதவ் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் நன்றாக செயல்படுகிறார் எங்களுடைய பவுலர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story