குஜராத்துக்கு எதிரான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - கே.எல்.ராகுல்


குஜராத்துக்கு எதிரான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - கே.எல்.ராகுல்
x

Image Courtesy: Twitter

லக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

லக்னோ,

ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறியது. குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் குஜராத்துக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளனர் என லக்னோ கேப்டன் ராகுல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த வெற்றியை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். எங்களது அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது மைதானம் எப்படி இருக்கிறது என்பதை எங்களது பந்துவீச்சாளர்கள் புரிந்து கொண்டனர். ஒவ்வொரு முறையும் நாங்கள் 160 ரன்களுக்கு மேல் அடிக்கும் போது அந்த ரன்களை வைத்து வெற்றிகரமாக போட்டியை முடிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

லக்னோ மைதானத்தில் விளையாடும் போட்டிகள் எங்களுக்கு அதிக சாதகமாக இருக்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை எங்களது அணியின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுமே மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி இருந்தனர். க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னாய் ஆகியோர் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்கள். அதோடு தற்போது சித்தார்த் மணிமாறனும் எங்கள் அணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story