பாட்மிண்டன் பிரிவில் மலேசியாவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வென்று இந்தியா வரலாறு படைத்தது


பாட்மிண்டன் பிரிவில் மலேசியாவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வென்று இந்தியா வரலாறு படைத்தது
x
தினத்தந்தி 9 April 2018 1:50 PM GMT (Updated: 9 April 2018 1:50 PM GMT)

பாட்மிண்டன் பிரிவில் மலேசியாவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வென்று இந்தியா வரலாறு படைத்து உள்ளது. #SainaNehwal #WinGold

கோல்டுகோஸ்ட்,

 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. பாட்மிண்டன் பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும்,  மலேசிய அணியும் மோதின.

இதில் முதலில் நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, மலேசியாவின் பெங் சான், லியு கோ ஜோடியை 21-14, 15-21, 21-15 என வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மலேசியாவின் சாங் லீயை 21-17, 21-14 என வென்றார். பின் நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கி ரெட்டி, சந்திரசேகர் செட்டி ஜோடி, மலேசியாவின் வீ தான், செம் கோ ஜோடியிடம் 15-21, 20-22 என தோற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நேவால், மலேசியாவின் சோனியா ஷியாவை எதிர் கொண்டார். இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்னா 21-11, 19-21, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

இதன் மூலம் இந்திய அணி 3-1 என மலேசிய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இரு போட்டிகளில் வென்று தங்கப்பதக்கத்தை உறுதி செய்துவிட்டதால், மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெறவில்லை.  மேலும் இந்திய பேட்மிண்டன் அணி முதல் முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story