படப்பிடிப்பில் விபத்து இந்தி நடிகை அலியாபட் காயம்

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இந்தி நடிகை அலியாபட்-க்கு காயம் ஏற்பட்டது.

Update: 2018-03-20 23:15 GMT
பிரபல இந்தி நடிகை அலியாபட். இவர் இந்தி டைரக்டர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். அலியாபட் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது ‘பிரமஸ்த்ரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர் ஆகியோரும் நடிக்கின்றனர். அயன்முகர்ஜி இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. அலியாபட் வில்லன்களுடன் ஆவேசமாக மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த காட்சியில் அவர் நடித்தபோது உயரத்தில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையிலும் கையிலும் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அலியா பட்டை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சில வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். அலியாபட் கடும் வலியால் அவதிப்படுகிறார் என்றும் 15 நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கூறியதால் அவரை மும்பைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்