“டுவிட்டரில், என் பெயரில் போலிகள்” - நடிகர் விஜய் சேதுபதி ஆவேசம்

டுவிட்டரில், தனது பெயரில் போலிகள் இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-01 23:15 GMT
பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். நடிகர்-நடிகைகள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி தனது புகைப்படங்களை வெளியிடுகிறார்கள், புதிய படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் சமூக, அரசியல் கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள். இந்தி நடிகர், நடிகைகள் பலரும் இதில் உள்ளனர்.

சமூக வலைத்தளத்தை விட்டு இதுநாள் வரை ஒதுங்கி இருந்த நடிகை ஐஸ்வர்யாராயும் சமீபத்தில் டுவிட்டருக்கு வந்து படங்களை வெளியிடுகிறார்.

இவற்றில் நடிகர்-நடிகைகள் பெயரில் போலி கணக்குகளும் உள்ளன. ரசிகர்கள் அவற்றை உண்மை என்று நம்பி பின்தொடர்கிறார்கள். குறிப்பிட்ட நடிகர்-நடிகைகள் பெயரில் கருத்துக்களும் அவற்றில் பதிவாகின்றன.

இந்த போலி கணக்கில் நடிகர் விஜய் சேதுபதி பெயரும் சிக்கி உள்ளது. அவர் பெயரில் நிறைய போலி கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து போலிகளை அப்புறப்படுத்த விஜய்சேதுபதியே டுவிட்டரில் புதிய கணக்கு தொடங்கி உள்ளார். அதில் “டுவிட்டரில் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளன. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தகவல் பதிவிட்டு உள்ளார்.

விஜய் சேதுபதி டுவிட்டரில் இணைந்ததை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்