புதிய படத்தில் பேயாக மிரட்டும் திரிஷா

மோகினி பேய் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா. திகில் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் பேய் படங்கள் அதிகம் தயாராகின்றன.

Update: 2018-06-11 02:33 GMT
முன்னணி கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடிக்க விரும்புகிறார்கள். மாயா படத்தில் நயன்தாரா பேயாக வந்தார். அனுஷ்காவும் சமீபத்தில் வெளியான பாகமதியில் பேயாக மிரட்டினார். திரிஷா மோகினி என்ற படத்தில் பேயாக நடித்துள்ளார்.

மோகினி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் முடித்துள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகளும் மிரட்டலாக இருக்கும் என்கின்றனர். மோகினி படம் பல மாதங்களுக்கு முன்பே முடிந்தும் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து படத்தின் டைரக்டர் ஆர்.மாதேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“மோகினி பட வேலைகளை முடித்து திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் பட வெளியீட்டை முறைப்படுத்தி பட்டியல்கள் வெளியிடுகிறது. மோகினி படத்துக்கும் தேதி ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். சமீபத்தில் காலா வந்ததால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்த மாதம் இறுதியில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

படத்துக்கு தணிக்கை குழுவினர் யூ சான்றிதழ் அளித்துள்ளனர். குடும்பத்தோடு பார்க்கும் கலகலப்பான படமாக மோகினி தயாராகி உள்ளது. அதிரடி, நகைச்சுவை, திகில் காட்சிகள் படத்தில் இருக்கும். திரிஷாவின் சினிமா வாழ்க்கையில் இது அவருக்கு முக்கிய படம். பேயாக உயரத்தில் பறந்தும் தண்ணீருக்குள் இருந்தும் அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களுக்கு மிரட்டலாக இருக்கும். பூர்ணிமா பாக்யராஜ், சாமிநாதன், மதுமிதா, யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்