தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வேடத்தில் நாசர்

தெலுங்கானா முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் சந்திரசேகரராவ் வாழ்க்கை படத்தில் சந்திரசேகரராவ் வேடத்தில் நாசர் நடிக்கிறார்.

Update: 2018-07-02 23:54 GMT
மறைந்த ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை சினிமா படமாகி வரும் சூழ்நிலையில் தற்போது தெலுங்கானா முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் சந்திரசேகரராவ் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் சந்திரசேகரராவ் வேடத்தில் நாசர் நடிக்கிறார். அல்லு கிருஷ்ணம் ராஜு இயக்குகிறார்.

படத்துக்கு உத்யசிம்ஹம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழில் போராட்ட சிங்கம் என்று இதற்கு அர்த்தம். தெலுங்கானா மாநிலம் உருவாக சந்திரசேகரராவ் மேற்கொண்ட போராட்டங்கள், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் வென்று முதல்-மந்திரியாகி தெலுங்கானா மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசென்றது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று இயக்குனர் கூறினார்.

இந்த படத்தை சந்திரசேகரராவ் குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். வருகிற டிசம்பர் மாதம் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கு முன்னதாக படத்தை நவம்பர் 29-ந் தேதி திரைக்கு கொண்டு வந்து தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் நடிப்பது குறித்து நாசர் கூறியதாவது:-

“தெலுங்கானா மாநிலம் அமைய தனி மனிதராக போராடி வெற்றி கண்ட சந்திரசேகரராவ் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் இந்த படம் எனது முதல் படத்தில் நடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

சந்திரசேகரராவ் சம்பந்தமான புத்தகங்களை படித்தும், வீடியோக்களை பார்த்தும் அவரது கதாபாத்திரத்துக்கு என்னை தயார்படுத்தி இருக்கிறேன். முழு திறமையையும் காட்டி நடிக்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

தயாரிப்பாளர் நாகேஸ்வரராவ் கூறும்போது, “சந்திரசேகரராவ் கதாபாத்திரத்துக்கு நிறைய நடிகர்களை பரிசீலித்தோம். நாசர் பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம்” என்றார். 

மேலும் செய்திகள்