நவம்பர் 19-ந் தேதி தீபிகா படுகோனே திருமணம்

தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணம் நவம்பர் மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-07-02 23:57 GMT
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானார். இந்த படத்தில் நடித்ததற்காக எதிர்ப்புகளையும் கொலை மிரட்டல்களையும் சந்தித்தார்.

இதே படத்தில் வில்லனாக வந்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேயேயும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் அடிக்கடி வெளிவந்தன. இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

ரன்வீர்சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசாங்கம் அந்த நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால் தீபிகா படுகோனேவுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இத்தாலியில்தான் திருமணம் நடந்தது. இத்தாலி அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து உள்ளது. தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் எப்போது நடக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

தற்போது திருமண தேதி முடிவாகி உள்ளது. நவம்பர் மாதம் 19-ந் தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர்சிங் கூறும்போது ‘எனது திருமணம் இந்த வருடம் நடக்கும்’ என்றார். ஆனால் மணப்பெண் பெயரை அவர் சொல்லவில்லை. 

மேலும் செய்திகள்