‘மேக்கப்’ போடுவதற்கு 3 மணி நேரம் ‘அகோரி’யாக நடிக்கிறார், சாயாஜி ஷின்டே

நடிகர் சாயாஜி ஷின்டே அகோரி என்ற படத்தில், அகோரியாக நடிக்கிறார்.

Update: 2018-07-07 22:30 GMT
ஞானராஜசேகரன் டைரக்டு செய்த ‘பாரதி’ படத்தில், பாரதியார் வேடத்தில் நடித்து, தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார், சாயாஜி ஷின்டே.

மும்பையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

தற்போது அவர் ஒரு தமிழ் படத்தில், அகோரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘அகோரி’ என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பி.எஸ்.ராஜ்குமார் டைரக்டு செய்கிறார். ஆர்.பி.பாலா, சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து தயாரிக்கிறார். சிவனடியாராக உள்ள ஒரு அகோரிக்கும், தீயசக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

இந்த படத்தில் நடிப்பது பற்றி சாயாஜி ஷின்டே கூறியதாவது:-

“தமிழ் பட உலகில், ‘பாரதி’ படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு வில்லன், குணச்சித்ரம், நகைச்சுவை என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து இருக்கிறேன். ‘அகோரி’ படத்தில் நடிக்க கேட்டபோது, அவர்கள் சொன்ன கதை எனக்கு பிடித்து இருந்தது. இதில் நான் அகோரியாக, சிவனடியார் வேடத்தில் நடிக்கிறேன். ‘மேக்கப்’ போடுவதற்கு மட்டும் 3 மணி நேரமாகிறது.

நான், அகோரிகளை சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசி பெற்று இருக்கிறேன். அகோரியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரமும், அதன் தோற்றமும், நடிப்பும் என் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கும்.”

இவ்வாறு சாயாஜி ஷின்டே கூறினார். 

மேலும் செய்திகள்