‘குடிபோதையில் செக்ஸ் தொல்லை கொடுத்தார்’ டைரக்டர் மீது நடிகை மீண்டும் புகார்

மலையாள பட உலகில் நடிகைகளுக்கு அதிகமான செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்குதான் நடந்தது.

Update: 2018-07-10 23:15 GMT
பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வர வேண்டும் என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நிர்ப்பந்திப்பதாக நடிகைகள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் போத்தன் வாவா, மை பாஸ் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ள நிஷா சாரங் டெலிவி‌ஷன் டைரக்டர் உன்னிகிருஷ்ணன் மீது செக்ஸ் புகார் தெரிவித்துள்ளார். ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார் என்றும், உடன்பட மறுத்ததால் படப்பிடிப்பில் கிள்ளியும், சில்மி‌ஷம் செய்தும் தொந்தரவு கொடுத்தார் என்றும் கூறினார்.

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து செக்ஸ் புகாரில் சிக்கிய டைரக்டர் உன்னிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. டி.வி. தொடரில் இருந்து அவரை நீக்கிவிட்டு புதிய இயக்குனரை நியமிக்க டி.வி. நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த செக்ஸ் தொல்லை குறித்து விளக்கி நடிகை நிஷா சாரங் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘‘உன்னிகிருஷ்ணன் நீண்ட நாட்களாகவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது நடவடிக்கை பிடிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. நான் மறுத்ததும் தனது ஆசை நிறைவேறவில்லையே என்ற ஆதங்கத்தில் என்னை கேவலமாக திட்டினார். போனிலும் மோசமாக ‘மெசேஜ்’ அனுப்பினார்.

அவர் தவறாக நடக்க முயன்றது படக்குழுவினருக்கு தெரியும். அவர்கள் உன்னிகிருஷ்ணனை  கண்டித்தனர். அவர் தொல்லை தாங்காமல் பல முறை அழுது இருக்கிறேன். ஆனாலும் திருந்தவில்லை. தினமும் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்து தொந்தரவு கொடுத்தார். என்னை கத்தார் மற்றும் அமெரிக்காவுக்கு அழைத்து இந்த தொடரில் நடித்ததற்காக கவுரவித்தனர். விருதுகளும் கொடுத்தார்கள்.

அது உன்னிகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. நடிப்புதான் எனது தொழில். இதில் வரும் வருமானத்தில்தான் எனது குடும்பம் நடக்கிறது. என் மகளின் திருமணத்துக்காக அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொண்டேன்’’.

இவ்வாறு நிஷா சாரங் கூறினார். 

மேலும் செய்திகள்