‘‘நல்ல படம் எடுப்பது போருக்கு போவது மாதிரி’’–நடிகர் சூர்யா

நல்ல படம் எடுப்பது போருக்கு போவது மாதிரி என்று நடிகர் சூர்யா பேசினார்.

Update: 2018-09-01 22:15 GMT
திரையுலகில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான முகவரி கார்டு என்று கூறுவார்கள். அந்த வகையில், சென்னையில் நேற்று குறும் பட போட்டிகள் நடந்தன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் நடிகர் சூர்யா வழங்கினார். 

நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:–

‘‘ஒரு படம் எடுப்பது சுலபம். ஆனால் நல்ல படம் எடுப்பது போருக்கு போவது மாதிரி. இந்த விழாவுக்கு வந்திருப்பது, ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம். இந்த வயதில் இருப்பவர்கள்தான் இனி வரும் நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள். நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப்பருவத்தை பார்த்தவன். ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.

எந்த ஒரு வி‌ஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோ என்று நினைத்தால், அதை அப்போதே உடனே சரி செய்து விடவேண்டும். எங்கேயும் குறை வந்துவிடக் கூடாது என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும் படங்கள் என்றாலும், அதில் சிறிய குறை கூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப் போகிறது.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ, இதுபோன்ற குறும் படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். ‘கம்பளிப்பூச்சி’ குறும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, அதைப்பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான். பெற்றோர்கள், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள், சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.

இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் வெற்றி. 80 லட்சம் பேர் பார்த்தால், அது மிகப்பெரிய வெற்றி. எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறதோ, அதை செய்யுங்கள். இந்த மார்க்கெட் திறந்தவெளி. இதில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும். ஆனால், எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.’’ 

இவ்வாறு சூர்யா பேசினார்.

மேலும் செய்திகள்