அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் 3வது போஸ்டர் வெளியீடு

அஜித்குமார் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் 3வது போஸ்டர் வெளியிடப்பட்டது.

Update: 2019-03-05 23:34 GMT
அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இதில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். 3 பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வாதாடுகிறார் அஜித்குமார்.

அப்போது அந்த பெண்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. அவற்றில் இருந்து காப்பாற்றி கோர்ட்டு மூலம் அந்த பெண்களுக்கு எப்படி நியாயம் செய்கிறார் என்பது கதை. இந்த படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில் படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைத்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அஜித்தின் தோற்றத்தையும் வெளியிட்டனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் 2வது போஸ்டர், 3வது போஸ்டர் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.

படத்தின் தலைப்பு குறித்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, “நேர்கொண்ட பார்வை தலைப்பை பாரதியாரின் பாடலில் இருந்து எடுத்துள்ளனர். அந்த பாடல் புதுமைப்பெண்களை பற்றி பேசியது. படத்துக்கு இதைவிட சிறந்த தலைப்பு இருக்க முடியாது” என்றார்.

மேலும் செய்திகள்