குடிபோதையில் போலீசை தாக்கிய நடிகை மீது வழக்குப்பதிவு

இந்தி நடிகை ரூகி சிங் மீது போலீசாரை தாக்கியதாகவும், காரில் சென்று விபத்து ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-04-03 22:00 GMT
இந்தி நடிகையும், மாடல் அழகியுமான ரூஹி சிங் ஆண் நண்பர்கள் சிலருடன் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று இருந்தார். அங்கு குடிபோதையில் இருந்த ரூஹி சிங்குக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போதை தலைக்கேறி போலீஸ்காரர்களுடன் ரூஹி சிங் மோதியதாகவும், போலீசாரின் உடைகளை பிடித்து இழுத்து கிழித்து சரமாரியாக அடித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு ஆண் நண்பர்களுடன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார். சான்டாக்ரூஸ் சாலையில் கார் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது ரூகி சிங்கின் கார் மோதியது. தகவல் அறிந்து வந்த போலீசார் நள்ளிரவு என்பதால் அவரை கைது செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

தற்போது ரூகி சிங் மீது போலீசாரை தாக்கியதாகவும், காரில் சென்று விபத்து ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்