திகில்-நகைச்சுவை படத்தில், தமன்னா!

நடிகை தமன்னா திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார்.

Update: 2019-05-09 22:00 GMT
நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் இணைந்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

`அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார். தமன்னா ஒரு சவாலான கதாபாத்திரத்தில் திகிலாக வலம் வருகிறார்.

அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை' புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுதுகிறார். ஈகிள்ஸ் ஐ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும். அதுபோல் தமன்னாவுக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை அவர் நண்பர்களுடன் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்? என்பது, இந்த படத்தின் கதை. படப் பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.''

மேலும் செய்திகள்