அஞ்சாதே 2-ம் பாகம் தயாராகும் - நடிகர் நரேன்

கார்த்தியின் கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நரேன். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. படம் குறித்து நரேன் அளித்த பேட்டி வருமாறு:-

Update: 2019-10-18 23:00 GMT
“நீண்ட இடைவெளிக்கு பிறகு கைதி படத்தில் நடித்துள்ளேன். இன்னொரு ரவுண்டு வருவதற்கு தகுதியான படம். இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். கார்த்தியும், நானும் நெருங்கிய நண்பர்கள். அவர் போன் செய்து கைதியில் நடிக்கும்படி கூறினார். கதை வித்தியாசமாக இருந்தது. கதாநாயகி இல்லை. எனது கதாபாத்திரம் வலுவாக இருப்பதை உணர்ந்து உடனே சம்மதித்தேன். படம் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருக்கும். அதிரடி திகில் படமாக உருவாகி உள்ளது. நல்ல போலீசாகவே வருகிறேன். காட்டில் இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினார்கள். பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும் நமக்கு பிடித்த மாதிரியான படம் என்று உற்சாகத்தோடு நடித்தோம். படக்குழுவினர் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்.

கார்த்தி உணர்வுப்பூர்வமாக நடித்து இருக்கிறார். முகமூடி படத்தில் நடித்த பிறகு எனக்கு நிறைய வில்லன் வேடங்கள் வந்தன. அவற்றில் நடிக்க உடன்பாடு இல்லை. வித்தியாசமான கதைகள் வந்தால் வில்லனாக நடிப்பேன். மிஷ்கின் இயக்கத்தில் நான் நடித்த அஞ்சாதே படம் பெரிய வெற்றி பெற்றது. அஞ்சாதே இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை உள்ளது. மிஷ்கினிடம் இது குறித்து பேசினேன். அஞ்சாதே-2 படமாக வாய்ப்பு இருக்கிறது.”

இவ்வாறு நரேன் கூறினார்.

மேலும் செய்திகள்