பட அதிபர் தனஞ்செயன் டைரக்டர் ஆனார்

பட அதிபர் தனஞ்செயன் ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

Update: 2019-11-14 21:45 GMT
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான  தனஞ்செயன், நிர்வாக தயாரிப்பாளராக தனது திரையுலக அனுபவத்தை தொடங்கினார். பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்தார். பூ, கண்டேன் காதலை, காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமவுலி, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு உள்பட இதுவரை 30 படங்களை தயாரித்து இருக்கிறார். 2 தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.

அடுத்து இவர், ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

‘‘நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது, அந்த படங்களின் கதை விவாதங்களிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன. எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு சரியான நேரம் இப்போதுதான் அமைந்து இருக்கிறது.

கடந்த 4 மாதங்களாக நானும், என் குழுவினரும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தோம். சில நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் என் கதையை சொன்னபோது, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை அடுத்த மாதம் (டிசம்பர்) அறிவிக்க இருக்கிறேன்.

இது, ஒரு திகில் படமாகும். ஒரு புத்தம் புது அனுபவத்தை ஏற்படுத்தும். படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்கும்.’’

மேலும் செய்திகள்