அழியாத கோலங்கள்-2 படத்தில் நடித்தது பெருமை; அர்ச்சனா, ரேவதி மகிழ்ச்சி

பாலுமகேந்திரா இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் இரண்டாம் பாகம் எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் அர்ச்சனா, ரேவதி நடிப்பில் அழியாத கோலங்கள்-2 என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Update: 2019-12-20 23:30 GMT
சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் அர்ச்சனா கலந்து கொண்டு பேசியதாவது:-

“நான் பாலுமகேந்திராவின் மாணவி. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அழியாத கோலங்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தோம். இதில் நிறைய கஷடங்களை சந்தித்தோம். 400-க்கும் மேற்பட்ட சிறிய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அழியாத கோலங்கள்-2 படத்தை தொடர் முயற்சி எடுத்து திரைக்கு கொண்டு வந்தோம். படத்துக்கு கிடைத்த வரவேற்பில் கஷ்டங்கள் மறைந்தன. நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.”

இவ்வாறு அர்ச்சனா கூறினார்.

நடிகை ரேவதி கூறியதாவது:-

“நான் முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து இருக்கிறேன். நான் படங்கள் இயக்க பாலுமகேந்திராதான் குரு. அவரது அழியாத கோலங்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கஷ்டங்களை தாண்டி திரைக்கு வந்த இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய பட உலகில் போட்டிகள் உள்ளன. இளம் கதாநாயகிகள் சவால்களை சந்திக்கின்றனர். எங்கள் காலத்தில் ஒரே உடையை பல விழாக்களுக்கு அணிந்து செல்வோம். இப்போது ஒரு விழாவுக்கு அணிந்த உடை மற்றும் பயன்படுத்திய கைப்பையை அடுத்த விழாக்களில் பயன்படுத்துவது இல்லை. இதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.”இவ்வாறு ரேவதி கூறினார்.

மேலும் செய்திகள்