பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு மரணம்

பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு மாரடைப்பு காரணமாக காலமானார்.

Update: 2019-12-22 23:05 GMT
பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. செங்கல்பட்டு அருகிலுள்ள மதுராந்தகத்தில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புனே திரைப்பட கல்லூரியில் பயின்றார்.

இவர் ஜான் ஆபிரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், தேவதை, சாவித்ரி, மணிரத்னத்தின் பகல் நிலவு, பாடும் வானம்பாடி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ராமச்சந்திர பாபு கோழிக்கோடு அருகே புதிய படத்திற்கான இடங்களை பார்க்க சென்றிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ராமச்சந்திர பாபு, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்