மும்பையில் இருந்து டெல்லிக்கு சுய பாதுகாப்பு கவசங்களை அணிந்து விமானத்தில் பறந்த நடிகை

மும்பையில் இருந்து டெல்லிக்கு சுய பாதுகாப்பு கவசங்களை அணிந்து விமானத்தில் பறந்த நடிகை

Update: 2020-06-11 21:45 GMT
மும்பை,

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வரும் வேளையில், ஒவ்வொருவரும் கதி கலங்கித்தான் போகிறார்கள். அந்த தொற்றை தவிர்ப்பதற்காக முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பராமரித்தல், கை சுத்தம் பராமரித்தல் என கட்டுப்பாடுகளுடன் வாழ்வதற்கு அனைவரும் பழகி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் ஒருபடி மேலே போய் விட்டார்.

இவர், பிரபல தமிழ் பட இயக்குனர் செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் கன்னட ரீமேக் படத்தில் அறிமுகம் ஆனவர். தமிழில் ‘தடையற தாக்க’ படத்திலும் நடித்துள்ளார். பல மொழி படங்களிலும் நடித்து வருகிற இவர், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் மும்பையில் இருந்து டெல்லிக்கு நேற்று விமானத்தில் சென்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுதலை தவிர்ப்பதற்காக, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் இருந்து பணியாற்றுகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் அணிந்து கொள்கிற பி.பி.இ. என்று அழைக்கப்படும் சுய பாதுகாப்பு கவசங்களை (முக கவசம், கையுறைகள், ஷூ கவர் உள்ளிட்டவை) அணிந்து கொண்டு, நடிகை ரகுல் பிரீத் சிங் விமானத்தில் பறந்தார்.

இதையொட்டி ‘மிஷன் டெல்லி’ என்ற ’ஹேஷ்டேக்’கை உருவாக்கி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “ஹாய் தோழர்களே, நாம் இப்படியெல்லாம் (தனது சுய பாதுகாப்பு கவசங்களை சுட்டிக்காட்டி) பயணிக்க வேண்டி இருக்கும் என்று யாரேனும் நினைத்து இருப்போமா?” என கேட்கிறார்.

முன்னதாக மும்பை விமான நிலையத்தில் அவர் பேசும்போது, “ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து நான் நடித்து அடுத்து வரவுள்ள அட்டாக் படத்துக்காக வேலை செய்து வருகிறோம். நாங்கள் எல்லோரும் தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறோம்” என கூறினார்.

இவர் இன்னொரு வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் முக கவசம் அணிந்து கொண்டு, “நான் விண்வெளிக்கு செல்வதைப்போல உணர்கிறேன்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்