‘விருமாண்டி’ 2-ம் பாகத்தில் கமல்?

விருமாண்டி 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-10 10:06 GMT
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.

கமல்ஹாசன் விஸ்வரூபம் 2-ம் பாகத்தில் நடித்து இருந்தார். அஜித்குமாரின் பில்லா படம் இரண்டு பாகங்கள் வந்தன. விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, காஞ்சனா உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சியின் அரண்மனை போன்றவை 3 பாகங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. கமல்ஹாசன் அபிராமி ஜோடியாக நடித்த விருமாண்டி படம் 2004-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. பசுபதி, நெப்போலியன், நாசர், ரோகிணி, சண்முகராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார்கள். 

குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான டைரக்டர் முத்தையா விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்து கமல்ஹாசனிடம் சொன்னதாகவும், அவருக்கும் கதை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விருமாண்டி 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்