'குண்டூர் காரம் படத்தில் நான் பயன்படுத்தியது ஆயுர்வேத பீடி' - நடிகர் மகேஷ் பாபு விளக்கம்

பேமிலி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Update: 2024-01-16 10:54 GMT

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் 'குண்டூர் காரம்' திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. ஆந்திராவில் தமிழ் படங்களான அயலான், கேப்டன் மில்லர், படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு போட்டியாக தெலுங்கில் ஹனு-மான் படம் மட்டுமே வெளியானது.

இந்த படத்தை 'அலா வைகுந்தபுரம்லூ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி இருந்தார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பேமிலி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் செண்ட்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருந்தன. இது ரசிகர்களுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டு என பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் குண்டூர் காரம் படத்தில் தான் பயன்படுத்தியது ஆயுர்வேத பீடி என நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'குண்டூர் காரம் படத்தில் நான் பயன்படுத்திய பீடி, உண்மையான பீடி அல்ல. அது ஆயுர்வேத பீடி. அதில் புகையிலைக்கு மாறாக லவங்க இலைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். முதல்முறை எனக்கு படக்குழுவினர் உண்மையான பீடியைக் கொடுத்தனர். அதனை புகைத்ததும் எனக்கு தலைவலி வந்துவிட்டது.

இதனை என்னால் புகைக்க முடியாது என கூறிவிட்டேன். பின்னர் படக்குழுவினர் ஆயுர்வேதத்தால் ஆன பீடியை கொடுத்தார்கள். இதில் எந்த பிரச்சினையும் இருக்காது என கூறிய பின்புதான் அதனை புகைத்தேன். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்