சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' இறுதிக்கட்ட படப்பிடிப்பு

'அமரன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் நிறைவடைய உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-05-24 10:17 GMT

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்' திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு 'அமரன்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் 16-ம் தேதி அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் நிறைவடைய உள்ளது. மூன்று பாடல் சூட்டிங்கிற்கு பிறகு படப்பிடிப்பு முடியவுள்ளது. கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1992-ம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கும்  பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்