சிரஞ்சீவி படத்தில் மகேஷ்பாபு?

தெலுங்கில் மூத்த நடிகரான சிரஞ்சீவி ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து, கொரட்டல சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2020-02-28 10:18 GMT
‘மிர்ச்சி’, ‘ஸ்ரீமந்துடு’, ‘ஜனதா கேரேஜ்’, ‘பரத் அன நேனு’ என்று கொரட்டல சிவா இயக்கிய 4 படங்களுமே அதிரிபுதிரி வெற்றியை பதிவு செய்த படங்கள். எனவேதான் சிரஞ்சீவி இவரை தனது அடுத்த படத்தின் இயக்குனராக தேர்வு செய்தார். இந்தப் படத்திற்கு ‘ஆச்சாரியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிரஞ்சீவியோடு, திரிஷா ஜோடி போட்டுள்ளார். 

ஆலயங்களிலும், அதை நிர்வகிக்கும் துறைகளிலும் நடக்கும் ஊழலைப் பற்றி இந்தப் படம் பேசும் என்கிறார்கள். இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிப்பதோடு, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் ராம்சரண், ராஜமவுலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருவதால், ‘ஆச்சாரியா’ படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் நக்சல் கதாபாத்திரமான அதில் நடிக்க, தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவிடம் கேட்கும்படி, இயக்குனரிடம் ராம்சரண் வலியுறுத்தியிருக்கிறார். 

கொரட்டல சிவாவும் அதுபற்றி மகேஷ்பாபுவிடம் தெரிவிக்க, அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்தும் இருக்கிறதாம். ஆனால் அதில் நடிப்பதா.. வேண்டாமா.. என்பது பற்றி இன்னும் எந்த முடிவையும் மகேஷ்பாபு வெளியிடவில்லை. சிரஞ்சீவியோடு மகேஷ்பாபு நடிப்பாரா.. இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்