‘அன்பு செல்வன்’ படக்குழு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படம் தயாராகி வருகிறது, இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.

Update: 2021-11-08 18:05 GMT
இயக்குனர் கவுதம் மேனன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் ‘அன்பு செல்வன்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும், இந்த படத்தை வினோத் குமார் இயக்கி உள்ளார் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மேலும் கவுதம் மேனன் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டரும் வெளியிட்டனர்.

இதைப் பார்த்து ஷாக் ஆன கவுதம் மேனன் ‘அன்பு செல்வன்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்று மறுத்தார். இதையடுத்து ‘அன்பு செல்வன்’ படக்குழுவினர் கவுதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டு படத்தில் அவர் நடித்து இருப்பது உண்மை என்றனர். படத்தின் பெயர் அன்பு செல்வன் என்று மாற்றப்பட்டதே குழப்பத்துக்கு காரணம் என்றும் தெளிவுப்படுத்தினர்.


இதையடுத்து அன்பு செல்வன் படக்குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார் மனு அளித்துள்ளார். அதில், “ஜெய் கணேஷ் இயக்கத்தில் ‘வினா’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, 2018-ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு படத்தின் பணிகள் நடக்கவில்லை.

தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன். எனவே ‘அன்புசெல்வன்' படத்தின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்