இரண்டாவது காலாண்டில் விப்ரோ லாபம் 36 சதவீதம் வளர்ச்சி

முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) ரூ.2,561 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.

Update: 2019-10-16 06:24 GMT
சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 36 சதவீத வளர்ச்சியாகும். அப்போது லாபம் ரூ.1,885 கோடியாக இருந்தது. எனினும் முந்தைய காலாண்டைக் காட்டிலும் லாபம் 6.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

கணக்கீட்டுக் காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.2,674 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் உயர்வாகும். முந்தைய காலாண்டைக் காட்டிலும் 5.4 சதவீத வளர்ச்சியாகும். மொத்த வருவாய் 4 சதவீதம் உயர்ந்து ரூ.15,130 கோடியாக இருக்கிறது. அதே சமயம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது வருவாய் 2.4 சதவீதம் குறைந்துள்ளது. அப்போது வருவாய் 5.3 சதவீதம் உயர்ந்து ரூ.14,716 கோடியாக இருந்தது. டாலர் மதிப்பில் வருவாய் 0.5 சதவீதம் உயர்ந்து 204 கோடி டாலராக உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது விப்ரோ நிறுவனப் பங்கு ரூ.244-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.245.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.239.20-க்கும் சென்றது. இறுதியில் ரூ.243.70-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.14 சதவீத ஏற்றமாகும்.

மேலும் செய்திகள்