பட்ஜெட் தாக்கல் எதிரொலி: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,800 புள்ளிகள் உயர்வு

பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,800 புள்ளிகள் உயர்ந்து 48,172.85 ஆக காணப்படுகிறது.

Update: 2021-02-01 09:29 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.  மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது.  இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை வழங்கியது.

இந்த பட்ஜெட்டில் வேளாண், வங்கி, கல்வி,  ரெயில்வே, கப்பல், பேருந்து போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  இந்த பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 1,800 புள்ளிகள் உயர்ந்து 48,172.85 ஆக காணப்பட்டது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வர்த்தகத்தின் நடுவே, 493 புள்ளிகள் உயர்ந்து 14,128 ஆக காணப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் வங்கி பிரிவில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக கடந்த வெள்ளி கிழமையுடன் முடிவடைந்த வங்கிக்கான நிப்டி குறியீட்டில் இருந்து 3.2 சதவீதம் அளவுக்கு இன்று காலை பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

இவற்றில் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்கு விலை உச்சமடைந்து அதிக அளவாக 9.5 சதவீதத்துடன் காணப்பட்டது.  இதேபோன்று பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 4 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை 6.36 சதவீதமும், எச்.டி.எப்.சி. மற்றும் பெடரல் வங்கியின் பங்கு விலை 2 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.

மேலும் செய்திகள்