திருச்சி மரப்பட்டறையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பலகைகள் எரிந்து நாசம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சாலையில் மரப்பட்டறை உள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் இந்த மரப்பட்டறையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

Update: 2019-03-31 22:45 GMT

திருச்சி,

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சாலையில் சேகர் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது. இங்கு கட்டில், நாற்காலி உள்ளிட்டவற்றை செய்தது போக மீதம் உள்ள மரங்கள், பலகைகள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மரப்பெட்டி செய்பவர்கள் இதனை வாங்கி செல்வது வழக்கம். நேற்று மாலை 4 மணி அளவில் இந்த மரப்பட்டறையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் 4 வாகனங்களில் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு படையினருக்கு உதவியாக மாநகராட்சி குடிநீர் லாரிகள் தண்ணீரை வினியோகம் செய்தன. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பலகைகள் எரிந்து நாசமாகின. மரப்பட்டறையில் எதனால் தீ பிடித்தது என தெரியவில்லை. பாலக்கரை போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயணைப்பு படையினர் சரியான நேரத்திற்கு வந்து தீயை அணைத்ததால் அந்த பகுதியில் இருந்த மற்ற கடைகள் மற்றும் வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

மேலும் செய்திகள்