திருமணமான ஓராண்டில் இளம்பெண்ணிடம் வரதட்சணையாக கார் கேட்டு சித்ரவதை; கணவர் கைது மாமியார் உள்பட 3 பேர் தலைமறைவு

திருமணமான ஓராண்டில் வரதட்சணையாக கார் கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மாமியார் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2019-04-05 23:00 GMT
மலைக்கோட்டை, 

திருச்சி காந்திமார்க்கெட் பெரியசெட்டி தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் கார்த்திக் (வயது 29). இவர், அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கார்த்திக்கிற்கு கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி உமா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, உமாவுக்கு அவரது பெற்றோர் வரதட்சணையாக 45 பவுன் நகை மற்றும் வீட்டுக்கான சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர்.

திருமணம் ஆகி ஓராண்டு ஆவதற்குள், கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் உமாவிடம் உன் பெற்றோரிடம் சென்று கார் வாங்கி வா? என வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே, திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் அழைத்து பேசி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கோபம் கொண்ட உமா, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பெற்றோர் அவரை சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த உமாவிடம் கணவர் மற்றும் மாமியார், மைத்துனி, கொழுந்தன் ஆகியோர் சேர்ந்து கார் கேட்டு மீண்டும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் உமாவின் தலையை பிடித்து சுவற்றில் கணவர் கார்த்திக் மோதச்செய்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக அக்குடும்பத்தினர் அனைவருமே இருந்துள்ளனர். காயம் அடைந்த உமா, சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து நேற்று முன்தினம் உமா, திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் கிரேசி ஆகியோர் கணவர் கார்த்திக், மாமியார் நளினி, கொழுந்தன் சாய்சுதாகர், மைத்துனி கீர்த்தனா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களில் கார்த்திக் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மாமியார் நளினி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்