துவரங்குறிச்சி அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

துவரங்குறிச்சி அருகே போதிய குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-09 22:45 GMT
வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரம் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானபேர் திருவிழாவை காண்பதற்காக ஊருக்கு வந்துள்ளனர். இதனால் அதிகாரம் கிராமத்தில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.

திருவிழாவையொட்டி கூடுதலாக குடிநீர் வினியோகிக்கும்படி ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் கூறியும் போதிய குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரி தீனதயாளன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்