குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் வாழை வியாபாரி பலி

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் வாழை வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-04-30 22:15 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி (வயது 50). வாழை வியாபாரியான இவர், நேற்று புதுப்பாளையத்தில் இருந்து குளித்தலைக்கு வாழை இலைகளை விற்பனை செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அதனை ஏற்றி கொண்டு சென்றார்.

பின்னர் அங்கு வாழை இலைகளை அனைத்தையும் விற்றுவிட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். குளித்தலை - மணப்பாறை சாலையில் கோட்டமேடு வாய்க்கால் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சன்னாசி மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சன்னாசி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த சன்னாசியை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றி சன்னாசி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்