உளுந்தூர்பேட்டை அருகே, தீக்குளித்து பெண் தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-08-08 22:45 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் எழிலன் (வயது 37). இவரது மனைவி இளையராணி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளையராணிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டுக்கு வந்த எழிலன், இளையராணிக்கு ஆதரவாக பேசவில்லை என தெரிகிறது. இதனால் கணவர் தனக்கு ஆதரவாக பேசாததால் மனமுடைந்த இளையராணி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எழிலன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீ பரவி எரிந்ததில், இருவரும் வலியால் அலறி துடித்தனர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளையராணி பரிதாபமாக உயிரிழந்தார். எழிலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இளையராணியின் தந்தை தேவராஜ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்