திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: தொழிலாளியின் மனைவி கழுத்தை அறுத்து கொலை டிரைவர் கைது

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியின் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-11 23:15 GMT
செம்பட்டு,

திருச்சி விமானநிலையம் காந்திநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). இவர் கே.கே.நகர் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மாரியப்பனின் மனைவி உமாமகேஸ்வரி (வயது 35). இவர் வீட்டின் அருகே டீக்கடையுடன், டிபன் கடை நடத்தி வந்தார்.

உமாமகேஸ்வரிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சண்முகத்திற்கும்(34) இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் மாரியப்பனுக்கு தெரியவந்தது. அவர், உமாமகேஸ்வரியை கண்டித்தார். இதனால் ஆட்டோ டிரைவர் சண்முகத்துடனான பழக்கத்தை உமாமகேஸ்வரி துண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உமாமகேஸ்வரி நேற்று இரவு டிபன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டு, அதே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சண்முகம், திடீரென உமாமகேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் ரோட்டில் சாய்ந்து விழுந்தார். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உமாமகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தது குறித்து தகவல் அறிந்ததும் மாரியப்பன் அங்கு ஓடி வந்து மனைவியை மீட்டு ஒரு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியிலேயே உமாமகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் நிஷா, பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன், விமானநிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் உமாமகேஸ்வரியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் தப்பியோடிய ஆட்டோ டிரைவர் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அவரை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சண்முகம் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்காதல் விவகாரத்தில் கூலித்தொழிலாளியின் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்