செங்குன்றம் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்
செங்குன்றம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் அருகே உள்ள எல்லம்மன்பேட்டையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் வாலிபர், இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து, இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பரத்(வயது 19) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும்போதே பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக போலீசார் வந்து வாலிபரை கைது செய்துவிட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.