அரக்கோணம் அருகே, கத்தியுடன் சுற்றித்திரிந்த 5 வாலிபர்கள் கைது - 3 வாகனங்கள் பறிமுதல்

அரக்கோணம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2020-01-11 04:00 IST
அரக்கோணம், 

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியில் மணல் கடத்துபவர்களை தடுக்க செல்லும் அரசு அதிகாரிகளின் வாகனங்களை சேதப்படுத்தவும், அதிகாரிகளை மிரட்டவும் சிலர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை தக்கோலம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த 5 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். போலீசார் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருங்கை கிராமத்தை சேர்ந்த குமரன் (வயது 24), சேந்தமங்கலத்தை சேர்ந்த லட்சுமணன் (27), சித்தூரை சேர்ந்த ராஜா (26), சுமைதாங்கியை சேர்ந்த ரவி (36), சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த பிரகா‌‌ஷ் (22) என்பதும், மேலும் மணல் திருட்டை தடுக்க வரும் அரசு அதிகாரிகளின் கார்களை சேதப்படுத்த திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்